மகா சிவராத்திரி விரதத்தின் முழு பலனை அடைய இதை செய்ய மறக்காதீர்கள்.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் பலரும் இன்றைய தினத்தில் மகா சிவராத்திரி விழாவை பிரம்மாண்டமாக கொண்டிருக்கின்றனர். சிவாலயங்களில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவும் கட்டாயம் பலிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்ற சிறப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் முக்கியமான ஒன்று உள்ளது.
சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம். உலகம் முழுவதும் இருக்கும் சிவாலயங்களில் நான்கு ஜாம பூஜைகளில் ஒவ்வொன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு கால பூஜைக்க்கும் மற்றொரு கால பூஜைக்கும் இடையே மூன்று மணி நேரம் இடைவெளி இருக்கும் என்பது தான் கணக்கு.
இன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை முதல் கால பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கும். பக்தர்கள் அனைவரும் அதில் கலந்து கொண்டு பலனடைய வேண்டும். முதல் கால பூஜையில் கலந்து கொள்வோர் பஞ்சகாவிய பொருட்களில் ஒன்றை தானமாக வழங்குவதன் மூலம் புண்ணியம் அடைவார்கள். பால், தயிர், நெய், வெண்ணை என்று தங்களின் வசதிக்கேற்ப தானம் அளிக்கலாம். அவர்களுடைய சந்ததிகள் தழைத்தோங்கும். வழிவழியாக தங்களின் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து முடிப்பார்கள். இரண்டாம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் பாயாசத்தை நிவேதனமாக வைத்து தானமாக வழங்குவதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்பது ஐதீகம். மூன்றாம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்து சிவனுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து நிவேதனமாக எள் சாதம் வைத்து தானமாக வழங்குவதன் மூலம் சிவனின் அருளை பரிபூரணமாக பெற முடியும்.
இந்த நேரம் லிங்கோத்பவ நேரமாக கருதப்படுவதால் விரும்பியபடி மரணம் நிகழும். துர்மரணங்கள் தவிர்க்கப்படும். நான்காம் ஜாம பூஜையில் கலந்து கொள்வோர் சுத்த அன்னம் எனப்படும் நெய்வேத்திய பொருளை நிவேதனம் செய்ய வேண்டும். உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். இரவு முழுவதும் கண்விழித்து உபவாசம் மேற்கொண்டு சிவநாமம் ஜெபித்து விரதம் இருப்பது மட்டும் முழுபலனையும் தந்துவிடாது. மறுநாள் பகல் முழுவதும் விழித்திருக்க வேண்டும் பூஜை புனஸ்காரங்கள் தான் முடிந்தாயிற்றே என்று படுத்து தூங்கிவிடக் கூடாது. சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம்.
