இந்த பொருட்களை எல்லாம் கோவிலிலிருந்து வீட்டிற்கு எடுத்து வரக்கூடாதா?
நம்மில் சிலர் கோவிலுக்கு சென்றால் சில வழிமுறைகளை பின்பற்றுவதை வழக்கமாக வைத்திருப்போம். அதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. சிவன் சொத்து குலநாசம். நவகிரக சன்னிதானத்தில் கொடுக்கும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. இப்படி பலவகைப்பட்ட சாஸ்திரங்களை பின்பற்றுவதை நாம் வழக்கமாக வைத்து வருகின்றோம். ஆனால் இதில் சில தவறான கருத்துக்களும் காலப்போக்கில் சேர்ந்துவிட்டது.
நாம் தவறாக புரிந்து கொண்டிருக்கும் சில சம்பிரதாயங்களுக்கு தீர்வினைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் ஒரு தெளிவான பதிலை காணப்போகிறோம்.
முதலில் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழிக்கு இணங்க சிவன் கோவிலில் தரும் விபூதி, குங்குமம், பிரசாதம், புஷ்பம் இவைகளை கூட சிலர் வீட்டிற்கு எடுத்து வர மாட்டார்கள். ஆனால் இது தவறான ஒன்று. சிவன் கோயில்களில் கொடுக்கும் பிரசாதங்களை நாம் வீட்டிற்க்கு கொண்டு வந்து வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் தருவதில் எந்த ஒரு தவறும் இல்லை. நம் முன்னோர்கள் சிவன் கோவில்களுக்கு என்று ஒரு பகுதி சொத்தினை எழுதி வைத்திருப்பார்கள். அந்த காலங்களில் எல்லாம் மன்னர்கள் தங்கள் சொத்தில் ஒரு பகுதியை கோவில்களுக்கு தானமாக வழங்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தார்கள்.
அந்த சொத்தில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானத்தை வைத்து அந்த கோவிலில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்திருக்கும். ஆனால் சில பேர் கோவில் சொத்தை தன்னுடைய சொத்து என்று ஏதாவது ஒரு குறுக்கு வழியில் மூலம் அபகரித்து இருப்பார்கள். இப்படி கோவிலின் சொத்தை அபகரித்தவர்கள் ஒரு காலகட்டத்தில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அவர்களுடைய ஜாதக கட்டத்தில் கெட்ட தசாபுத்திகள் ஆரம்பிக்கும் சமயத்தில் அவர்களது குலமே அழிந்து போகும் சூழ்நிலை ஏற்படும் என்பதுதான் உண்மை. இது சிவன் சொத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு கோவிலின் சொத்தினை அபகரித்தாலும் இந்த நிலைமைதான்.
சிவன் சொத்து குலநாசம் என்பதற்கு இதுதான் அர்த்தம். அடுத்ததாக சிலபேர் நவகிரக சனியை வழிபட்டு விட்டு, தொட்டு கும்பிடாமல், திரும்பிப் பார்க்காமல் வந்தால் அந்த கிரகங்களினால் நமக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்று நினைத்திருப்பார்கள். ஆனால் அது தவறு. கிரகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட சமயத்தில், சிவனை தஞ்சமடைந்து தான் அந்த கிரகங்களுக்கே விமோசனம் கிடைத்தது. சிவனால் விமோசனம் அடைந்த நவ கிரகங்களை வழிபடுவதன் மூலம் நமக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதற்காக சிவனை தஞ்சம் அடைவதே நவகிரக கோயிலாக கருதப்படுகிறது.
இதேபோல் திருநள்ளாறுக்கு சென்று பரிகாரங்கள் செய்து விட்டு வந்தால் அங்கு தரும் விபூதி பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வரக்கூடாது என்ற பயமும் சிலருக்கு உண்டு. சனிபகவானுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சிவபெருமான் திருநாளில் தான் விமோச்சனம் அளித்துள்ளார். இதனால் அங்கு தரும் பிரசாதத்தை வீட்டிற்கு எடுத்து வந்தால் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற பயம் இனி நமக்கு வேண்டாம். கோவிலில் இருக்கும் தெய்வங்கள் அனைத்தும் நமக்கு நன்மை செய்வதற்காக தானே தவிர, எந்த தெய்வமும் கோவிலில் கொடுக்கும் பிரசாதத்தை வீட்டிற்கு கொண்டு வருவதன் மூலம் தீமையை செய்து விடாது என்பதை மனதார உணருங்கள்.
