வள்ளலார் கூறிய செய்யக்கூடாத பாவங்கள் எவை தெரியுமா?
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய கருணை மனம் இவருடையது.
வடலூர் சத்திய தருமச்சாலையில் பசியால் வாடும் மக்களுக்கு பசியாற்றிட இவர் அன்று மூட்டிய அடுப்பு இன்னும் அணையாமல் தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை தீர்த்து வருகின்றது. பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளிக்கவே இந்த தருமசாலை தொடங்கப்பட்டது. இவர் ஒரு மகா ஞானி ஆவார். இவரால் எழுதப்பட்ட ‘மனு முறை கண்ட வாசகத்தில்’ குழந்தைகளுக்கு நல்ல போதனையை கூறியுள்ளார்.
வள்ளலார் கூறிய 42 வகையான பாவங்கள் பின்வருமாறு.
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பவர்கள்.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதருள் கழகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒருதலைச் சார்பாக வழக்கு வைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலையை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்கு பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பத்தை குலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவது.
20. கலங்கி ஒளிந்தவரை காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளை கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.
28. பட்சியை கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பால் ஊட்டாமல் கட்டி அடைப்பது.
30. மாமிசம் உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தை அழிப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தை இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தைதாய் அறிவுரைகளை தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.
இந்தப் பாவங்களை செய்யாமல் இருந்தாலே அவரது சன்மார்க்க வழியிலேயே வாழ்ந்து பலனை அடையலாம்.
